தேடு

Sunday, October 2, 2011

பகவான் விரும்புவது எது?

முக்தி... இதைத் தான் பலரும் விரும்புவர். அதாவது, பிறவி எடுத்து பல சுக-துக்கங்களை அனுபவித்து, பிறகு மரணமடைகின்றனர். "இது போன்ற பிறவியும், துன்பங்களும் வேண்டாம். பகவானே... எனக்கு முக்தியைக் கொடு...' என்று வேண்டுபவர்கள் உண்டு. 
மற்றும் சிலர், "பகவானே... எனக்கு மீண்டும் பிறவியைக் கொடுப்பதானால் கொடு; ஆனால், அது நல்ல பிறவியாக இருக்கட்டும். பகவானை வழிபட்டுக் கொண்டிருக்கும்படியான பிறவியைக் கொடு...' என்று தான் வேண்டுவர். இது, பக்தர்களின் விருப்பம். 


"அடுத்த பிறவியிலாவது நான் பணக்கார வீட்டில் பிறந்து, பணக்காரனாக இருக்க வேண்டும்...' என்று சிலர் வேண்டுவதும் உண்டு.
இப்படி வேண்டி பெறும் பிறவியில், அவன் உண்மையிலேயே அமைதியாக வாழ முடியுமா? பணம் படைத்தவர்களைக் கேட்டால் என்ன சொல்கின்றனர்? "பணமாவது, பொருளாவது சார்... மனசுலே அமைதியே கிடையாது. பணத்தைக் காப்பாற்ற எவ்வளவு பாடுபட வேண்டி உள்ளது. 


திருடர், கொள்ளையர் பயம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், நண்பர்கள், பந்து ஜனங்களின் தொந்தரவு...' என்கிறான்.
யாருக்காவாது ஏதாவது கொடுத்தால் அதுவே பிரச்னையாகி விடுகிறது. "அவனுக்கு அவ்வளவு கொடுத்தாயே... எனக்கு மட்டும் இவ்வளவுதானா?' என்று மனஸ்தாபம்.
சரி... இருக்கும் போது எல்லாரும் வந்து வாங்கிக் கொண்டு போகின்றனர். இவன் கொடுத்துக் கொடுத்தே ஏழையாகி போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் என்ன சொல்கின்றனர்? "இருக்கும் போது கண் மண் தெரியாமல் செலவு செய்தான். இப்போ ஒன்றுமில்லாமல் திண்டாடுகிறான். இருக்கும் போது நிதானமாக இருக்க வேண்டாமா?' என்கின்றனர். 
இவனிடம் வாங்கிக் கொண்டு போனவர்களே கூட, "இவனை யார் இப்படி அள்ளி, அள்ளிக் கொடுக்கச் சொன்னது! அப்போதே இல்லை என்று சொல்லியிருக்கக் கூடாதோ...' என்கின்றனர்.


பணம் உள்ள போது, 10 பேர் வாசலில் வந்து நிற்பர்; பணம் இல்லாத போது, இவன் வீட்டு வாசல் வழியாகக் கூட போகப் பயப்படுவர். இவன் கொடுத்ததை மறந்து விடுவர்; இல்லை என்று சொன்னதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்வர்.
பணம் இருக்கும் போது பிறருக்கும் உதவி செய்; பகவானுக்கும் ஒரு பங்கு கொடு. மனிதர்கள் நீ கொடுத்ததை மறந்து விடுவது சகஜம்; 
ஆனால், பகவானுக்கு நீ சிறிதளவு செய்தாலும், அவன் மறக்க மாட்டான்; என்றும் ஞாபகம் வைத்துக் கொண்டு, நீ கொடுத்தை விட, பலமடங்கு திருப்பிக் கொடுத்து விடுவான். உன் பணம் அவனுக்குத் தேவையில்லை; உன் மனம் தான் அவனுக்குத் தேவை. மனமாற எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வான். சமயத்தில் திருப்பிக் கொடுப்பான்.


நன்றி:ஆன்மிகமலர்

Wednesday, August 31, 2011

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம்-ரமணர்



மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்னையே இங்குதான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் . நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள். ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும். உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.

Saturday, August 27, 2011

அர்த்தமுள்ள இந்துமதம்


பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:
ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி
நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.
அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.
அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.
அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.
நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!
கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.
எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.
அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன்.
சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.
லண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ், இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.
கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி, புத்தபிரானைச் சந்தித்ததும் ஞான தீட்சை பெற்று விட்டாள்.

மனிதனின் சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இதுவும் வள்ளுவன் சொன்னதே.
`உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் யோக்கியதை தீர்மானிக்கப்படும்’ என்பது வள்ளுவன் சொல்லே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால், எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.
திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.
நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல துன்பமும் இல்லை.
நல்லது.
இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
அவனோடு ஒட்டாமலேயே பல நாட்கள் ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த பின் உறவு கொள்வது.
ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.
மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது இருக்கும் புத்தி, மற்ற சகவாசங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் இருக்க வேண்டும்.

Thursday, July 21, 2011

ஐன்ஸ்டைனும் ஆன்மீகமும்.

இவ்வுலகில் பல பேர் அறிவியலாளர் என்றாலே அவர்களுக்கும் ஆன்மீகத்துக்கும் சுத்தமாக சம்பந்தம் இருக்காது என்றே எண்ணுவார்கள். என்னைப் பொருத்தவரைஅறிவியலும் ஆன்மீகமும் ஒன்றே, இரண்டும் தேடுவது ஒன்றைத்தான், இப்படைப்பின் ரகசியம் என்ன?. அனைத்து ஆன்மீகக் கருத்துக்களும் விவாதத்துக்கு உட்படுத்தப் பவேண்டும் (நான் சொல்லலீங்க, விவேகானந்தர் சொன்னார்.) எது அனைத்துக்கும் சரியாக மனம் ஏற்றுக்கொள்ளும் படி பதில் தருகிறதோ அதுவே உண்மையான மதம் (இதையும் அவர்தாங்க சொன்னாரு). சரி ஐன்ஸ்டைன் மதத்தைப் பற்றி என்ன சொல்றார், இதோ பார்ப்போம்,


ஐன்ஸ்டைன் மதம், கடவுளைப் பற்றிக் கூறுவது இதுதான் : “நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி தாழ்மையுடன் மெய்ப்பாடு ஞானத்தைத் தெளிவு படுத்தும் ஓர் உன்னத தெய்வீகத்தை மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரமாண்டமான பிரபஞ்சத்தை உருவாக்கிய மாபெரும் ஒர் ஒளிமயமான மூலசக்தி எங்கும் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான் என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”


பிராணன் எங்கும் நிறைந்த வெளிப்படு சக்தியாக இருக்கிறது. …இந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கிற, நாம் சக்தி என்று அழைக்கிற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவது அனைத்தும் பிராணனே. உடல் இயக்கங்களாக, எண்ண சக்தியாக, நாடி ஓட்டங்களாக வெளிப்படுவதெல்லாம் பிராணனே. எண்ணம் முதல் மிகச்சாதாரண சக்தியாக இருப்பவை அனைத்தும் பிராணனின் வெளிப்பாடுகளே.”
                                                                                                                                      -சுவாமி விவேகானந்தர்
"சக்தியே சிருஷ்டியின் அடிப்படை விசை என நான் கருதுகிறேன். என் நண்பர் பெர்குஸன் அதனை எலன் வைட்டால் (elan vital) என அழைக்கிறார். ஹிந்துக்கள் அதனை பிராணன் என்கிறார்கள்.”                                                                                                                                      -ஐன்ஸ்டைன்




Monday, July 18, 2011

இறைவனைக் காணும் வழி-----ராமகிருஷ்ணர்

குரு ஒருவரை, அவருடைய சீடன் கேட்டான், "குருவே, இறைவனைக் காணும் வழியை எனக்குச் சொல்லுங்கள்", என்று.

அவரும், "என்னுடன் வா, காட்டுகிறேன்", என்று கூறி, அந்த சீடனை அருகிலிருந்த ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சீடனின் தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அழுத்தினார். சில நிமிடங்கள் கழித்துதான் அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சீடன், ஒருவழியாக விடுபட்டு எழுந்து நின்றான்.

"எப்படி இருந்தது?", என்று குரு கேட்டார்.

"என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன் என்றே நினைத்தேன்", என்றான் சீடன்.

"இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது அவனைக் காண்பாய்", என்றார், குரு.

Sunday, July 10, 2011

குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர்



யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவவழிபாட்டிலும் தான் கொண்டுபோய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். 
உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர்.

அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டது. பெரிய மகான்கள் தங்கள் சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக் காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன.
இத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் செயல்படுகிறது. அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்கல் சுக்கலாக நொறுங்கி மண்ணாகி விடும். குருவிற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதற்காக அடிமைப்பட வேண்டியதில்லை. குரு நமக்கு உதவுபவர் என்ற கருத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குள் நீங்களே முயன்று உண்மையைத் தேடுங்கள்.-விவேகானந்தர்.

தரிசனம்

     
இதைத்தான் பாரதியார் அவர் எழுதிய பகவத்கீதை புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.